Wednesday, April 28, 2010

ஸ்பெக்ட்ரம்: பெண் புரோக்கரின் தொலைபேசி ஒட்டு கேட்பு- ராசாவுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கின?

டெல்லி: தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் 2ஜி ஸ்பெட்க்ரம் விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் 'பயோனீர்' நாளிதழ் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி விவரம்:

பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகள் நடத்தி வரும் நிரா ராடியா என்ற பெண்ணின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதரங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைஷ்ணவி கார்பரேட் கன்சல்டன்ட்ஸ், நோயெசிஸ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ், விட்காம் கன்சல்டிங், நியூகாம் கன்சல்டிங் என பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகளை நடத்தி வரும் இந்தப் பெண், மாபெரும் நிறுவனங்களுக்கு புரோக்கராக செயல்பட்டு அரசு, அமைச்சர்களுடன் பல டீல்களை முடித்துக் கொடுத்து வருபவர் என்று தெரிகிறது.

இதற்காக தனது கன்சல்டிங் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற மூத்த மத்திய அரசு அதிகாரிகளைத் தான் பெருமாபாலும் பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் மூலம் அரசு திட்டங்களின் நெளிவு சுளிவுகளை அறிந்து, காய்களை நகர்த்தி காரியத்தை சாதிப்பவர் என்கிறார்கள்.

என்ஆர்ஐயான இந்த ரேடியா கடந்த 2000ம் ஆண்டில் தான் இந்தியாவுக்குத் திரும்பினார். வந்தவுடன் சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களுக்கு தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்.

ராசாவால் 2ஜி தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட 9 நிறுவனங்களில் 4 நிறுவனங்களுடன் ரேடியாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவரங்கள் தெரியவந்ததையடுத்து ரேடியாவின் தொலைபேசியை சிபிஐ சில காலமாக ஒட்டு கேட்டு வந்தது. இதன்மூலம் அவரது தில்லாலங்கடி வேலைகள் குறித்த விவரங்களும் ஆதாரங்களும் சிபிஐக்கு சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

ரேடியா விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியையும் சிபிஐ பெற்றுள்ளது. ரேடியாவின் 9 தொலைபேசிகளை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 120 நாட்கள் ஒட்டு கேட்டுள்ளது.

இதையடுத்து 2009ம் ஆண்டு மே 11ம் தேதி முதல் 180 நாட்கள் இந்த தொலைபேசிகளை வருமான வரித்துறையினர் ஒட்டு கேட்டுள்ளனர்.

அதே போல மேலும் பல தொழிலதிபர்கள, அரசியல்வாதிகள், விளம்பர நிறுவன அதிகாரிகளின் தொலைபேசிகளும் சிபிஐ, வருமான வரித்துறையால் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இதில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறி்த்து ஏராளமான ஆதாரங்கள் சி்க்கியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த ஏராளமான பணம் ரியல் எஸ்டேட், நிறுவனங்கள், மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளி்ல் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களும் இந்த ஒட்டு கேட்பு மூலம் வருமான வரித்துறைக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் மிலாப் ஜெயினுக்கு சிபிஐ டிஐஜி வினீத் அகர்வால் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஒட்டுக் கேட்பு மூலம் கிடைத்த முழுத் தகவல்களையும் வழங்குமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து ஜெயினின் உத்தரவுப்படி, நவம்பர் 20ம் தேதி வருமான வரித்துறையின் இணை இயக்குனர் அஷிஷ் அப்ரோல், சிபிஐ டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பிய பதிலில், நிரா ராடியாவுக்கும் அமைச்சர் ராசா உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் முழு விவரத்தையும் விளக்கியுள்ளார்.

அதில், நிரா ராடியா தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசும்போது, தான் எப்படி பல நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கித் தந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

மேலும் அமைச்சர் ராசாவுடனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது அவரது தனிச் செயலாளரராக இருந்த ஆர்.கே.சந்தோலியாவுடனும் பல முறை தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதையடுத்து சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறையின் ஆலோசகராக பதவி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் வாங்க பெருமளவில் பணத்தை தயார் செய்து தந்ததாகவும் ரேடியா ஒருவரிடம் கூறியதாகவும் வருமான வரித்துறை சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

உள்துறைச் செயலாளரின் அனுமதியோடு தான் இந்த தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன என்பதையும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

ஆனாலும் ரேடியாவை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசின் மிக மூத்த அதிகாரிகள் அனுமதி தரவில்லை. மேலும் தன்னை சிபிஐ கண்காணிப்பதை தனது தொடர்புகள் மூலம் உணர்ந்துவிட்ட நிரா ராடியா, கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக லண்டனுக்குச் சென்றுவிட்டார். கைதாவோம் என்ற அச்சத்தில் இதுவரை நாடு திரும்பவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு:

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

பாஜக, அதிமுக எம்பிக்கள் இந்த விவகாரத்தை இரு அவைகளிலும் கிளப்பிதால் பெரும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டன

thanks thats tamil

ஸ்பெக்ட்ரம்: சிபிஐ விசாரணை அதிகாரி திடீர் மாற்றம் ஏன்?- ஜெயலலிதா

சென்னை: ஐபிஎல் விவகாரத்தில் அமைச்சர் சசி தரூர் ராஜினாமா செய்யததைப் போல ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசாவும் பதவி நீக்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் குழுவின் கொச்சி உரிமை குறித்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் பெரும் சச்சரவுக்கு ஆளான மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூரின் நேர்மை குறித்த சந்தேகத்தையடுத்து, அவரை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

தரூரின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், மிக உயர்ந்த ஜனநாயக மரபுப்படி, தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்தார்.

தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக, இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் ரூ. 60,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், தனக்கும், தன் உறவினர்களுக்கும், கூட்டாளிகளுக்கும், நண்பர்களுக்கும் தவறான ஆதாயத்தை ஏற்படுத்திய மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் அத்துமீறலையும், அராஜகத்தையும் இந்த நாட்டிற்கும், இந்திய அரசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் நினைவூட்ட வேண்டியது எனது கடமையாகும்.

ஐ.பி.எல். பங்குகளை விற்பனை செய்வதில் தனது செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது தான் சசி தரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சா‌ற்று. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தன்னுடைய செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சா‌ட்டு.

ஐ.பி.எல். பங்கு விற்பனை என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பான தனியார் பிரச்சனை. மாறாக ஸ்பெக்ட்ரம் என்பது இந்திய அரசாங்கத்தின், இந்திய மக்களின் சொத்து.

சசி தரூர் ஆற்றிய பணிக்கு, அவருடைய நண்பர் ரூ. 70 கோடி அளவுக்கு உரிமைதாரரிடமிருந்து பயனடைந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், ராசாவால் இந்த நாட்டிற்கு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த நடவடிக்கையில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கட்சித் தோழர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பயனடைந்து இருப்பதாகவும் ராசா மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஐ.பி.எல். விளையாட்டில் பங்குடைய ஒருவர் தரூருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நேர்மை வாய்ந்த கட்சிகள் சுமத்தியுள்ளன.

நாட்டின் முன்பும், நாடாளுமன்றத்தின் முன்பும் தரூர் அவமானப்படுத்தப்பட்டு, பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், ராசாவோ தொடர்ந்து மத்திய அமைச்சராக, அதுவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, எந்த இலாகாவுக்கு அமைச்சராக இருந்தாரோ, அதே இலாகாவுக்கான அமைச்சராகவே தொடர்ந்து இருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தொடர்புடைய ரூ. 1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை தலைமையேற்று நடத்தி வந்த அதிகாரி வினீத் அகர்வால் திடீரென்று மாற்றப்பட்டுவிட்டார் என்று ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இதன் உள்நோக்கம் வெளிப்படையாக அனைவருக்கும் புரியக் கூடியது தான். மத்திய அரசு திமுகவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்த வழக்கை குழிதோண்டி புதைக்க முடிவு செய்துவிட்டது.

மத்திய கண்காணிப்பு ஆணையம் குற்ற‌ம்ச‌ாட்டியதன் காரணமாகத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணை அவசியமாயிற்று. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தவறான முறைகளை பின்பற்றியதன் காரணமாக, மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 26,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் அண்மையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படவில்லை என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் கருத்து தெரிவித்திருந்தார். "முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு" என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படும் என்ற முறையை ராசா பின்பற்றியது “சினிமா டிக்கெட் விற்பனை” போன்று அமைந்துள்ளது என்று இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமரின் அனுமதியை பெற்ற பிறகு தான் இந்த முரண்பாடுகள் நிறைந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் எழுத்துப்பூர்வமான உத்தரவை ராசா வெளிப்படையாகவே மீறியிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலத்தில் விடுவது குறித்து அமைச்சரவை அதிகாரக் குழுவின் முடிவிற்கு விட்டுவிடலாம் என்ற அப்போதைய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜின் ஆலோசனையையும் புறக்கணித்திருக்கிறார் ராசா.

நிர்ணயிக்கப்பட்ட தேதியை நியாயமின்றி, தன்னிச்சையாக முன்னுக்கு தள்ளி வைத்த தொலைத் தொடர்புத் துறையின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தொலைத் தொடர்புத் துறையின் முடிவு சட்டவிரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைத் தொடர்புத் துறையால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

வலுவான ஆதாரங்கள் இருந்தும், ராசா பதவி நீக்கம் செய்யப்படவில்லை. தற்போது ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரணை செய்து கொண்டு இருந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டுவிட்டார். எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கில் சி.பி.ஐ. கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

ராசா மற்றும் அவரது சில கூட்டாளிகள், குறிப்பாக நோசிஸ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைவர் நிரா ராடியா, ராசாவுடன் தனக்குள்ள தொடர்பை பயன்படுத்தி பல புதிய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிக் கொடுத்ததையும் சி.பி.ஐ. அடையாளம் கண்டிருப்பதாகவும்

ராசாவுக்கும், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு சிபிஐயால் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிரா ராடியா மற்றும் கனிமொழிக்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடித்து, இதன் மூலம், தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறையிலிருந்து விலக்கி வைக்க சில சக்திகள் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சி.பி.ஐ. விசாரணை ராசாவுக்கும், அவரது ஆசான் கருணாநிதிக்கும் மிகவும் பாதகமாக இருந்திருக்கிறது. நிலைமை மிக மோசமாகி, ராசா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டால், திமுக மத்திய அரசுக்கு அளித்து வரும் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைமை விசித்திரமாக இருக்கிறது. ஐ.பி.எல். விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூரின் தொடர்பு குறித்த சந்தேகத்தை லலித் மோடி எழுப்பிய போது, இணையமைச்சரை பலிகடா ஆக்கியது.

கூட்டணி என்று வரும் போது, கூட்டணிக் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது அதிகாரத்தை தியாகம் செய்யக்கூடிய நிலைக்கோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி தள்ளப்படுகிறது.

இது வெறும் 'பொது வாழ்வில் நேர்மை' குறித்த பிரச்சனை அல்ல. இந்த நாட்டிற்குச் சேர வேண்டிய சுமார் ரூ. 1 லட்சம் கோடியை கொள்ளையடித்த பிரச்சனை.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித் தனி வீடுகளை கட்டித் தருவதற்கு இந்தப் பணத்தை ஒதுக்கியிருக்கலாம்.

இந்த நாடே விலை போவதற்கு முன்பு, இந்த தேச சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சசி தரூரை ராஜினாமா செய்ய வைப்பதில் ஒற்றுமையாக இருந்த எதிர்க்கட்சிகளும், ஐ.பி.எல். ஊழல் குறித்து விழிப்புடன் செயல்பட்ட ஊடகங்களும் மற்றும் இந்த நாட்டின் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

மத்திய அமைச்சராக உள்ள ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வினீத் அகர்வால் சி.பி.ஐ. விசாரணைக் குழுவின் தலைவராக திரும்ப பணியமர்த்தப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர் ஜெயலலிதா

thanks
thats tamil